தன்னம்பிக்கை கதை – கழுகுகுஞ்சும் கோழிக்குஞ்சும்..!

0
5062
          விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான் . அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.
        சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது. எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு கொண்டிருந்தது.
       ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சுயிடம், ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்துகொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, “அச்சோ..! அந்த கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது.” என்று கவலையோடு கூறியது. இதைக் கேட்ட அந்த கழுகு குஞ்சும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது..” என்றது.
      கழுகு குஞ்சுயிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.
       இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட படிப்பே வராத மாணவர்களோடு சேர்ந்து தங்களின் திறனை உணராமல் இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.
       ஆதலால் நம் லட்சியத்திற்கு உறுதுணையாக இருக்கும் நட்புகளோடு சேர்ந்தால் வாழ்வு வளம் பெறும். “பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்” அதேநேரத்தில் “பன்றியுடன் சேர்ந்த கன்றும் மலம் உண்ணும்” என்ற இந்த இரண்டு பழமொழிகளின் பொருள் உணர்ந்து நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.