தினம் ஒரு மாதுளை -மருந்தாகும் மாதுளை

0
370

மருந்தாகும் மாதுளம் – இயற்கை மருத்துவம் ;

டெலிகிராம் – https://t.me/ssrtraditionalfoodandmedicine

– முதுமையை தடுக்கும் தன்மை.

– புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களை எதிர்க்கும் தாவர சத்துகள்.

– உடலுக்கு ஆரோக்கியத்தையும், இளமையையும் தரும் ஆற்றல்.

.. போன்றவைகளெல்லாம் மாதுளம்பழத்தில் நிறைந்திருக்கிறது.

இதனை தெய்வீக பழம் என்றும் கூறுவார்கள். காரணம், இல்லற இன்பத்துக்கான சக்தியை அதிகரித்து, இனப்பெருக்க திறனை மேம்படுத்துகிறது!

மாதுளை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று சுவைகளை கொண்டது. பித்த சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இது சிறந்த உணவு. நம் உடல் ஊக்கத்துடன் செயல்பட பித்தத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது.

பித்தம் நம் உடலில் பல விதங்களில் வினைபுரியும். சருமத்தின் நிறம், கண்பார்வை, ரத்த ஓட்டம், ஜீரணம் போன்றவைகளில் அதன் பங்களிப்பு இருக்கிறது.

அஜீரணம், வாந்தி, வாயில் அதிகமாக நீர் ஊறுதல், வாய்கசப்பு, நெஞ்செரிச்சல், மந்தம் போன்றவற்றிற்கும் மாதுளை சிறந்த மருந்து.

நம் குடலில் சில நேரங்களில் ஜீரண நீர்கள் சரியாக சுரக்காமல் இருக்கும். சாப்பிடும் உணவுகள் அதனால் ஜீரணமாகாமல் உடல் பலவீனமடையும். வயிற்று போக்கு, சீதக்கழிச்சல், அமீபியாஸிஸ் போன்ற நோய்கள் உண்டாகும். இது போன்ற சமயங்களில் மாதுளம் பழத்தின் முத்துகளை அரைத்து 200 மி.லி. நீரில் கலந்து சிறிது சிறிதாக பருகவேண்டும். பருகினால் ஜீரண நீர் நன்கு சுரந்து சிறப்பாக செயல்படும்.

கருவுற்ற பெண்களுக்கு தொடக்க காலத்தில் ஏற்படும் வாந்தி மயக்கம் மற்றும் ரத்த குறைபாட்டிற்கு மாதுளம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

வாந்தி, மயக்கம் அதிகமாகும்போது 200 மி.லி. மாதுளை சாற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி இஞ்சிசாறு, சிறிதளவு தேன் ஆகியவைகளை கலந்து பருகவேண்டும். வாந்தி, மயக்கம் குறைந்து உடல் ஆரோக்கியம் பெறும். இதனை தினமும் காலை, மாலை இருவேளை பருகலாம்.

வயதுக்கு வந்த பெண்கள் முதல் வயதான பெண்கள் வரை பலரும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் உடல் வெளுத்துப் போகுதல், மயக்கம், தலைசுற்றல், உணவில் விருப்பமின்மை, உடல் சோர்வு, கை– கால்கள் மரத்துப்போகுதல் உள்ளங்கை– கால்களில் எரிச்சல், கண் பார்வை குறைதல் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்துமே ஊட்டச்சத்து குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவுகளாகும். இவர்கள் தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டு வந்தால் உடல் நலம் தேறி இயல்பு நிலைக்கு வந்துவிடலாம்.

இதயம், சிறுநீரகங்கள் நன்கு செயல்படவும் மாதுளை உதவுகிறது. கெட்ட கொழுப்புகள் உடலில் சேருவதை தடுக்கிறது. மாதுளையில் உள்ள தாது சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தி எலும்பு சிதைவு நோய் வராமல் காக்கும்.

கருப்பையில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மாதுளை சிறந்த மருந்து. கருமுட்டை ஆரோக்கியத்திற்கும் இது உதவுகிறது. விந்துவின் அளவையும், தரத்தையும் உயர்த்தவும் உதவும்.

இனப்பெருக்கத்திற்காக தயார் செய்யப்படும் மருந்துகளிலும் மாதுளை சேர்க்கப்படுகிறது. மாதுளை பிஞ்சிற்கும், மாதுளை பழத்தோலுக்கும்கூட மருத்துவ சக்தி உண்டு. வயிற்றுப் போக்கு மற்றும் சீதக்கழிச்சல் ஏற்படும்போது மாதுளை பிஞ்சை அரைத்து 100 மி.லி. மோரில் கலந்து குடிக்க வேண்டும்.

பெண்களுக்கு மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருக்கும் காலங்களில், சிறிதளவு மாதுளம்பழ தோலை எடுத்து, 200 மி.லி. நீரில் கொதிக்கவைத்து தேன் கலந்து பருகவேண்டும்.

மாதுளம் பழத்தின் விதைகள் பதப்படுத்தபட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் பல சத்துகள் உள்ளன. ஊட்டசத்துக்கான மருந்துகளில் மாதுளை விதை சேர்க்கப்படுகிறது.