மனிதரை தொடர்ந்து மிருகங்களையும் தாக்கும் கொரோனா |சிங்கங்களுக்கு கொரோனா தொற்று

0
204
lion

வண்டலூர் அண்ணா விலங்கியல் பூங்காவில் மே 26 அன்று ஐந்து சிங்கங்கள் பசியின்மை மற்றும் அவ்வப்போது இருமல் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. ஒரு சிங்கம் இறந்துவிட்ட காரணத்தால் மற்ற சிங்கங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 11சிங்கங்களில் 9 சிங்கங்கள் SARS COV-2 வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டது. இந்த மிருகக்காட்சிசாலையில், ஒன்பது பேரில் ஒருவரான, 9 வயதான பெண் சிங்கம் நீலா, ஜூன் 3 அன்று மாலை 6.15 மணியளவில் இறந்தது. இந்த விலங்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது. இறப்பதற்கு முந்தைய நாள் (ஜூன் 2) மூக்கில் திரவம் வெளியேறியதால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது

ஆய்வக சோதனை முடிவுகளின்படி, அனுப்பப்பட்ட 11 பேரில் ஒன்பது சிங்கங்களுக்கான மாதிரிகள், SARS CoV-2 பாஸிட்டிவாக வந்துள்ளது. ஆனால் இறந்த சிங்கம் கொரோனா வைரஸ் தாக்கிதான் இறந்தது என்பதற்கு வலுவான ஆதாரம் இல்லை. இருந்தாலும் இறந்த சிங்கத்தின் பரிசோதனை மாதிரிகள், ஹைதராபாத் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனமான பரேலி மற்றும் செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

மிருகக்காட்சிசாலையின் கால்நடை குழு பரிந்துரையில் தொற்று உறுதியான அனைத்து சிங்கங்களும் நெருக்கமான கண்காணிப்பில் உள்ளன, மேலும் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் (தனுவாஸ்) நிபுணர் குழுவினரால் மேற்பார்வையிடப்படுகின்றன. இந்த விலங்குகளின் பராமரிப்பாளர்களும் உதவியாளர்களும் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விலங்கு பராமரிப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் கள ஊழியர்களுக்கு PPE KIT கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது போன்றே சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத் நேரு உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு தொற்று ஏற்பட்டதாக தகவல் வந்தது.அந்த ஹைதராபாத்தில் உள்ள சிங்கங்களில் காணப்படும் கொரோனா வைரஸ் SARS-CoV-2 வைரஸின் ‘A2a மாறுபாட்டை’ சேர்ந்தது என்று செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியலின் மையத்தின் (சி.சி.எம்.பி) இயக்குனர் ராகேஷ் மிஸ்ரா கூறியுள்ளார். முதல் அலைகளின் போது பகுப்பாய்வு செய்யப்பட்ட வைரஸின் மரபணுக்களில் காணப்படும் பொதுவான வகைகளில் A2a மாறுபாடு ஒன்றாகும். மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர்களிடமிருந்தோ அல்லது அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த பிற மனிதர்களிடமிருந்தோ விலங்குகள் வைரஸைப் பாதித்திருக்கக்கூடும் என்று அவர் கூறினார்.

விலங்குகள் மனிதர்களுக்கு இந்த நோயை பரப்புகின்றன என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை என்று மத்திய அரசு கூறியது நினைவில் கொள்ளப்பட வேண்டும்.