ஆறு மாதமாக போராடும் விவசாயிகள்.. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
217

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தைத் துவங்கி ஆறு மாத காலம் நிறைவு பெற்றுள்ள நிலையில், மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Farmers Protest : ஆறு மாதமாக போராடும் விவசாயிகள்.. மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற நடைமுறைகளைப் புறக்கணித்து அவசரம் அவசரமாகக் கொண்டு வந்த “விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைச்சட்டம் 2020”, “வேளாண்மை உற்பத்தி வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாட்டுச் சட்டம் 2020”, “அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020” ஆகிய மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் டெல்லியில் தங்கள் போராட்டத்தைத் துவங்கி இன்றுடன் (26.5.2021) ஆறு மாத காலம் நிறைவு பெறுகிறது.

இன்றளவும் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை, உணர்வுகளை மதித்து அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கு ஒன்றிய அரசு இதுவரை முன்வரவும் இல்லை, ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கும் முயற்சிக்கவில்லை என்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்


2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில், “இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறத் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இவற்றை ரத்து செய்திட ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்படும்” என்று தமிழக மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

எனவே, டெல்லியில் போராடும் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று, மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்கள் தொடர்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். இதுவரை மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் 6வது மாதத்தை எட்டியுள்ள போராட்டத்தை குறிக்கும் வகையில் நாடுதழுவிய போராட்டத்தை விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளனர். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 12 பிரதான எதிர்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்றைய நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கவும் விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் நடக்கும் நாடு தழுவிய போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.