பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மறுகூட்டல், விடைத்தாள் நகல், மறு மதிப்பீடு விதிமுறைகள்

0
392

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு -மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை-கட்டண விபரங்கள்

பத்தாம் வகுப்பு தேர்வர்கள் – மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை:

மே 2022, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம்.

மே 2022 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 22.06.2022 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022 (புதன் கிழமை) மாலை 5.00 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

மறுகூட்டல் (Retotal) கட்டணம்:

ஒவ்வொரு பாடத்திற்கும்-ரூ.205/

மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை:

மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வர்கள் – விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-1
விண்ணப்பிக்கும் முறை: விடைத்தாள் நகல் / மறுகூட்டல்-I கோரி விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் வழியாகவும் 22.06.2022 (புதன் கிழமை) காலை 10.00 மணி முதல் 29.06.2022 (புதன் கிழமை) மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றிற்கு மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க இயலும். தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகல் வேண்டுமா? அல்லது மதிப்பெண் மறுகூட்டல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து தெளிவான முடிவு செய்து கொண்டு அதன்பின்னர் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.

மதிப்பெண் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்திற்கு விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்திட இயலாது. விடைத்தாளின் நகல் பெற்ற பிறகு அவர்கள் மறுகூட்டல் / மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

விடைத்தாளின் நகல் (Copy of the answer script) பெறுவதற்கான கட்டணம் : –

ஒவ்வொரு பாடத்திற்கும்-ரூ.275/

மறுகூட்டல்- (Re-totalling-l) கட்டணம்

உயிரியல் பாடத்திற்கு மட்டும்-ரூ.305/

ஏனையப் பாடங்கள் (ஒவ்வொன்றிற்கும்)- ரூ.205/

பணம் செலுத்தும் முறை :

தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தைவிண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும்.

விடைத்தாள் நகல் – இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் முறை :

விடைத்தாள் நகல் விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் தங்களது விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விடைத்தாளின் நகலினை இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் ஊடகங்கள் வாயிலாகவும், www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்படும்.