சப் இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு எஸ்கேப்பாக முயன்ற பிரபல ரவுடி.. சென்னையில் சினிமா பாணியில் பரபரப்பு சம்பவம்

0
203

சென்னையில் காரில் வந்த பிரபல ரவுடி சிடி மணியை போலீசார் கைது செய்ய முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு ரவுடி தப்பிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

தேனாம்பேட்டை சேர்ந்தவர் சிடி மணி (என்ற)மணிகண்டன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆட்கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சென்னையில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. ஆரம்ப நாட்களில் சிடி விற்பனை செய்ததால் இவருக்கு சிடி மணி என பெயர் வந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்தவர் இவருக்கு எதிரான ஒரு ரவுடியை தீர்த்துக் கட்டுவதற்கு சதித்திட்டம் தீட்டியதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிடி மணி எங்கு பதுங்கி உள்ளார் என்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலை நாவலூர் பகுதியில் சிடி மணி பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

ஆனால் போலீசாரின் பிடியில் இருந்து சிடி மணி அங்கிருந்து தப்பினார். இதையடுத்து போரூர் அருகே காரில் வந்து கொண்டிருப்பதாக தகவலையடுத்து வளசரவாக்கம் உதவி கமிஷனர் மகிமை வீரன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்த போது போரூர் மேம்பாலம் அருகே வந்த சொகுசு காரை மடக்கினார்கள் அதில் சிடி மணி இருப்பதை அறிந்த போலீசார் அவனை வெளியே வரும்படி தெரிவித்தனர்.

காரில் இருந்து சிடி மணி இறங்காமல் போலீசாரை கண்டதும் காருக்குள் இருந்தபடியே துப்பாக்கியால் சுட்டார் இதில் காரின் கண்ணாடியை துளைத்த தோட்டா அங்கு நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் கையில் பாய்ந்தது இதில் அவரது கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சிடி மணி அங்கிருந்து தப்பியோட முயற்சி செய்தார். ஆனாலும் போலீசார் விடாமல் சிடி மணியை சுற்றி வளைத்தனர்.

அப்போது அவர் தப்பி ஓட முயற்சித்த போது கீழே விழுந்ததில் கை, கால் ஆகிய இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது இதையடுத்து காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிடி மணி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சிடி மணியிடம் இருந்து சொகுசு கார் மற்றும் துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.