செமஸ்டர் தேர்வு, மறு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

0
442

செமஸ்டர் தேர்வு, மறு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

செமஸ்டர் தேர்வு மற்றும் மறு தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

பொறியியல் படிப்புக்கான நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டு, ஏப்ரலில் தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால் அதில் சில முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்ததால், மறுதேர்வு நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மறுதேர்வு மற்றும் ஏப்ரல், மே மாத செமஸ்டர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஹால் டிக்கெட் அந்தந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மூலம் மின்னஞ்சலில் அனுப்பப்படும் அல்லது தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் இணையதளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்யலாம்.


தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக, மின்னஞ்சல், கூகுள் கிளாஸ்ரூம், மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலம் வினாத்தாள் அனுப்பப்படும்.

காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 பிரிவுகளாக 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும்.

வினாத்தாளை பதிவிறக்கிக் கொண்டு, தனி வெள்ளத்தாளில் நீலம் மற்றும் கருப்பு நிற மையினால் மட்டுமே தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் காலிப்பக்கம் விடக்கூடாது. பக்கம் காலியாக இருந்தால் பேனாவால் கோடிட்டு அடிக்க வேண்டும்.

தேர்வு எழுதி முடித்ததும் அதனை பிடிஎப் ஆக மாற்றி, நிர்வாகம் எதன் வழியாக பதிவேற்றம் செய்ய சொல்கிறதோ அதன்படி பதிவேற்ற வேண்டும்.

தேர்வு முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் விடைத்தாளை பதிவேற்றிவிட வேண்டும். காலதாமதமாக அனுப்பினால் நிராகரிக்கபடும்.

விடைத்தாளை நூலில் கட்டி, விரைவு தபால், பதிவு தபால் அல்லது கூரியர் மூலம் அந்தந்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் பெயரில் அன்றைய தினமே அனுப்ப வேண்டும்.

நேரடியாக கல்வி நிறுவனத்திற்கு சென்று விடைத்தாளை தரக்கூடாது. ஏ4 தாளில் 30 பக்கங்களுக்கு மிகாமல் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும்.

ஒவ்வொரு தாளின் மேல்புறத்திலும் மாணவனின் பெயர், பாட குறியீடு, பாடத்தின் பெயர், பதிவு எண் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

ஒவ்வொரு தாளின் கீழ்ப்பக்கத்திலும் தேர்வு தேதி, பக்கம் எண், கையொப்பமிட வேண்டும். மேலும் விளக்கம் தேவைப்பட்டால் அந்தந்த கல்லூரி நிர்வாகத்தை மாணவர்கள் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.