கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும்-தமிழக முதல்வர் அறிவிப்பு

0
206

கொரோனாவில் பெற்றோரை இழந்து தவிக்கும் ஆதரவற்ற குழந்தைகள் பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யப்படும் என்றும், அந்த குழந்தைகளின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்றின் 2-வது அலை ஏராளமானவர்களை பலி கொண்டுள்ளது. இதனால் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


ஆய்வு கூட்டம்

இந்த நிலையில் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால பராமரிப்பு குறித்த ஆய்வு கூட்டம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில், சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு உள்பட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


மு.க.ஸ்டாலின் உத்தரவுஇதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெற்றோரை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களைப் பாதுகாக்க அரசு சார்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை வழங்க ஏதுவாக, மாவட்ட அளவில், மாவட்ட கலெக்டர் தலைமையில் சிறப்பு பணி பிரிவு அரசால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


ரூ.5 லட்சம் வைப்பீடுஅதன் விவரம் வருமாறு:-
* கொரோனா நோய்த்தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா ரூ.5 லட்சம் வைப்பீடு செய்யவும், அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்த தொகை அந்த குழந்தைக்கு வட்டியோடு வழங்கப்படும்.
* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.
* இந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும்.
* கொரோனா நோய்த்தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும்.


சிறப்பு குழுவால்கண்காணிக்கப்படும்
* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர், பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவாக, மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.
* ஏற்கனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூ.5 லட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித்தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்பு குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.


வழிகாட்டி நெறிமுறைகள்
* அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இந்த குழந்தைகளுக்கும், நோய்த்தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.
மேற்படி நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறை செயலர் உள்பட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.