நகைச்சுவை நடிகர், இணை இயக்குநர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணம்

0
227

நகைச்சுவை நடிகரும், இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றிய பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இந்தச் செய்தியை இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பொன்ராமிடம் இணை இயக்குநராக இருந்தவர் பவுன்ராஜ். அந்தப் படத்தைத் தொடர்ந்து ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரங்களில் பவுன்ராஜ் நடித்தார்.

குறிப்பாக ‘ரஜினி முருகன்’ திரைப்படத்தில் டீக்கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாழைப்பழத்தை வலுவாக இழுத்துக் கடையின் கூரையை மொத்தமாக விழவைக்கும் இவரது நகைச்சுவைப் பகுதி இன்றளவும் பிரபலம். இந்தக் காட்சியில் மதுரைக்காரன் என்று இவர் பேசும் வசனமும் பல மீம்களில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மாரடைப்பின் காரணமாக பவுன்ராஜ் காலமானதாக இயக்குநர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

“#RIPPawnraj ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்” என்று பவுன்ராஜின் புகைப்படத்துடன் பொன்ராம் பகிர்ந்துள்ளார்.

ஜனநாதன், விவேக், தாமிரா, கே.வி.ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, தற்போது பவுன்ராஜ் எனக் கடந்த சில மாதங்களில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களின் அடுத்தடுத்த மரணங்கள் சக கலைஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.

#RIPPawnraj வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், போன்ற படங்களில் நடித்தவரும் எனது கோ டைரக்டருமான பவுன்ராஜ் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார் அவருக்கு ஆழ்ந்த இரக்கங்கள்