சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை வாங்கி கொடுப்பதின் ரகசியம் என்ன?

0
470

தமிழகத்தில் பரவலாக, பல மாவட்டங்களில் சகோதரிகளுக்கு, சகோதரர்கள் மஞ்சள் சேலை வாங்கி கொடுக்கும் வழக்கம் விமர்சை ஆகி வருகின்றது. இதனால் ஜவுளிக்கடைகளெங்கும் மஞ்சள் சேலைகள் குவித்து வைக்கப்பட்டு, வியாபாரம் ஜோராக நடந்து வருகின்றது.

சகோதரிகளுக்கு மஞ்சள் சேலை எடுத்துக் கொடுப்பதால் உறவு நீடிக்கும் என்றும், அவர்கள் ஆரோக்கியமாகவும், வளமாகவும் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையோடும் மஞ்சள் சேலை எடுத்துக் கொடுப்பதாக ஒரு சிலர் கூறுகின்றனர்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பொங்கல் படி கொடுப்பதுபோல சகோதரிகளுக்கு, மஞ்சள் சேலையுடன் பழங்கள், வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல பொருட்களோடு சீர் செய்வது போல சென்று சகோதரிகளை மகிழ்விக்கின்றனர். இதனால் உறவுகளிடையே ஒற்றுமையும் நீடித்த பந்தமும் அமைகின்றது.

இது ஒருபுறமிருக்க ஆசிரியர் ராஜேஷ் அவர்கள் இதுபற்றி கூறும் பொழுது, “இது ஜவுளிக்கடை காரர்களின் திட்டமிடப்பட்ட வியாபார யுக்தி.. ஜவுளிக்கடைகளில் விற்பனையாகாத மஞ்சள் சேலைகளை விற்பனை செய்யும் மாஸ்டர் பிளான்.. தற்பொழுது உள்ள காலத்தில் ஜவுளிக்கடைகளில் விற்பனை குறையும் போது ஜவுளி கடைக்காரர்கள் இது போன்ற யுக்தியை பயன்படுத்தி லாபத்தை ஈட்டுகின்றனர். மற்றபடி மஞ்சள் சேலை சம்பிரதாயம் ஒரு கண்துடைப்பு ஆகும். பொதுமக்கள் பணத்திற்காக கஷ்டப்படும் இந்த நேரத்தில், இவையெல்லாம் அவசியமில்லை என்று காட்டமாக கூறுகிறார் ராஜேஷ்.

எது எப்படியோ..! தங்கள் சகோதரர்கள் கொடுத்த மஞ்சள் சேலையை கட்டிக்கொண்டு படு குஷியாக இருக்கிறார்கள் சகோதரிகள்.