மீண்டும் வருகிறது பப்ஜி – கூகுள் பிளே ஸ்டோரில் 10 மில்லியன் பேர் முன்பதிவு!

0
101

பப்ஜி விளையாட்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், சுமார் 10 மில்லியன் பேர் கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் புதிய வடிவமைப்பில் பப்ஜி விளையாட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக பப்ஜி நிறுவனம் டிவிட்டரில் அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து கூகுள் பிளே ஸ்டோரில் முன்பதிவு தொடங்கியது. 2 மாதங்களில் மட்டும் இதுவரை சுமார் 10 மில்லியன் பேர் பப்ஜி நியூ ஸ்டேட் வீடியோ கேமுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். வீடியோ கேம் ஒன்றுக்கு முன்பதிவு செய்து காத்திருக்கும் நபரின் எண்ணிக்கையில் பப்ஜி கேம் புதிய சாதனையை படைத்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டாக பப்ஜி இருந்தது. சீனா எல்லையில் அத்துமீறியதைத் தொடர்ந்து பப்ஜி உள்ளிட்ட சீன நிறுவனங்கள் தொடர்பான செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், பப்ஜி, டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் தனிநபர் தகவல்களும் திருடப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனை திட்டவட்டமாக மறுத்த பப்ஜி நிறுவனம், இந்தியாவில் மீண்டும் பப்ஜியை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள PUBG விளையாட்டு, ஏற்கனவே சந்தையில் புழகத்தில் இருந்ததுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பப்ஜி விளையாட்டுக்கு அடிமையாக இருந்த பலருக்கும் இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது எனலாம். ஆன்டிராய்டு மற்றும் ஆப்பிள் ஐ.ஓ.எஸ் வெர்சன்களுக்கு ஏற்ற வகையில் பப்ஜி உருவாக்கப்பட்டுள்ளது.

பப்ஜி வீடியோ கேமின் இந்தியாவுக்கான அறிவுசார் சொத்துரிமையை வைத்துள்ள கிராப்டன் நிறுவனம், வீடியோ கேம், எஸ் ஸ்போர்ட்ஸ், பொழுதுபோக்கு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளில் மட்டும் 725 கோடி ரூபாயை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. மேலும், கிராப்டன் நிறுவனம் சீனாவைச் சேர்ந்தது என்பதால், இந்தியாவில் அனுமதி கிடைப்பதில் தொடர்ந்து சுணக்கம் நிலவி வருகிறது. இதனால், இந்தியாவுக்காக மட்டும் பிரத்யேகமாக தனி பப்ஜி கேமை உருவாக்கும் திட்டமும் அந்த நிறுவனத்திடம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.