ஏப்ரல் 4-இன்று மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்த நாள்!

0
240

ஏப்ரல் 4:

இன்று மனோன்மணீயம் சுந்தரனார் பிறந்த நாள்!

👉மனோன்மணியம்’ என்னும் கவிதை நாடக நூலை எழுதியவரும், சிறந்த தமிழ் அறிஞருமான பெ.சுந்தரம் பிள்ளை (Pe.Sundaram Pillai)-யின் 168ஆவது பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4).

👉இவரது காலம் (ஏப்ரல் 4, 1855 – ஏப்ரல் 26, 1897) ஆகும்.

👉‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் அடையாளம் தந்த மாபெரும் படைப்பாகும்.

👉தனது ‘மனோன்மணீயம்’ நாடகத்தின் முகவுரையில், ‘பழைமையிலும், இலக்கண நுண்மையிலும், விரிவிலும், ஏனைய சிறப்புகளிலும் எந்த மொழியையும்விடச் சிறந்த பெருமையுடையது செந்தமிழ். இன்று பல காரணங்களால் நலிந்து, மாசடைந்து, நிலை தளர்ந்து நிற்கின்ற தமிழைப் போற்ற வேண்டியது தமிழர்களின் தலையாய கடமையன்றோ’ என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

👉தமிழ் மொழி நலிந்து, மாசடைந்து நின்ற காலத்தில், அதன் தொன்மையையும், சிறப்பையும் எடுத்துக் கூறி ‘மனோன்மணீயம்’ என்கிற நாடகத்தின் வாயிலாக ஒரு மறுமலர்ச்சிக்கும் வித்திட்டார் சுந்தரனார்.

👉கேரள மாநிலம் ஆலப்புழையில் (1855) பிறந்தவர். தந்தை தமிழ் இலக்கியங்களை நன்கு கற்றவர். அவரிடமே தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களைக் கற்றார். 1876-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.

👉நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை இவரது தமிழ் ஆசிரியர். கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளின் சீடர் இவர். சட்டாம்பி சுவாமிகள், தைக் காட்டு அய்யாவு சுவாமி, நாராயண குரு ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். திருநெல்வேலி ஆங்கிலத் தமிழ்க் கல்விச் சாலையின் தலைவராக 2 ஆண்டுகள் பணியாற்றினார். அது பின்னர் இந்துக் கல்லூரியாக உயர உறுதுணையாக இருந்தார்.

👉திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். எம்.ஏ. தத்துவத்தில் பட்டம் பெற்றார். மகாராஜா அரண்மனையின் வருவாய்த் துறை தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். மகாராஜா கல்லூரி பேராசிரியர் ஹார்வியின் அன்புக்குரிய மாணவராகத் திகழ்ந்தார். 1885-ல் அதன் தலைமைப் பேராசிரியரானார். இறுதிவரை அங்கு பணியாற்றினார்.

👉சிறந்த படைப்பாளி. இந்திய, மேற்கத்திய தத்துவம் தவிர, வரலாறு, தொல்பொருளியல், இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘நூற்றொகை விளக்கம்’, ’திருவிதாங்கூர் பண்டைய மன்னர்கால ஆராய்ச்சி’ உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

👉‘மனோன்மணியம்’ என்ற நூலை 1891-ல் எழுதினார். கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970-ல் அறிவித்தது.

👉ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (திருஞான சம்பந்தரின் காலம்)’ என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

👉பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை ‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘ஜீவராசிகளின் இலக்கண மும் பிரிவும்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.

👉கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். திருவிதாங்கூர் அரசர்களின் மரபு பற்றி ஆராய்ந்து எழுதிய நூலை 1894-ல் வெளியிட்டார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரி இதழில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டார்.

👉மற்ற மொழிகளையும் இவர் ஒதுக்கியதில்லை. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றிவந்தார். ‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றுள்ளபோதிலும், தான் எழுதிய நூலின் பெயரால் ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என்று போற்றப்பட்டார்.

👉தனது ஆய்வு முடிவுகளை ஆங்கிலத்தில் வெளியிட்டதால், ஐரோப்பிய அறிஞர்களின் பாராட்டைப் பெற்றார்;

👉‘ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன்’ என்ற பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

👉19-ம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் நாடக நூலை எழுதியவரும், கல்வெட்டு ஆராய்ச்சி, தத்துவம், அறிவியல்முறை ஆய்வுகள், நூற்பகுப்பு முறைகள், இலக்கிய ஆய்வு எனப் பல களங்களில் மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான பெ.சுந்தரம் பிள்ளை 1897 ஏப்ரல் 26-ம் தேதி 42-வது வயதில் மறைந்தார்.

👉இவரது பெயரால் இன்று திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டுவருகிறது.