பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் மாதிரி பொதுத் தேர்வு

0
151

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் மாதிரி பொதுத் தேர்வை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களில், பிளஸ் 2 தவிர மற்ற மாணவர்கள், தேர்வுகள் எழுதாமல், ‘ஆல் பாஸ்’ செய்யப்பட்டுள்ளனர். பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், கொரோனா பரவல் முடிந்ததும் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இரண்டு கட்டமாக தேர்வுகள் நடத்துவதற்கான வரைவு விதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

ஊரடங்கு கட்டுப்பாடுகளால், பிளஸ் 2 மாணவர்கள் வீட்டில் இருப்பதால், அவர்கள் பாடங்களை மறந்து விடாமல் இருக்க, திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இரண்டு முறை திருப்புதல் தேர்வை முடித்த பள்ளிகள், அனைத்து பாடங்களையும் இணைத்து, மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாளுடன், மாதிரி பொதுத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ‘வாட்ஸ் ஆப்’ வழியே தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் தேர்வுக்கு பயப்படாமல் இருக்கவும், அவர்களை தேர்வுக்கு பழக்கவும், பாடங்களை நினைவுபடுத்தும் வகையிலும், மாதிரி பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.-