PGTRB தேர்வில் எளிதாய் வெற்றிபெற இதோ சில டிப்ஸ்!

0
1213

இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் அரசு பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்ற கனவு இருந்து வருகின்றது. அரசு பணிகளில் அதிகப்படியான சம்பளம், சலுகைகள், சமுதாயத்தில் நல்ல அந்தஸ்து ஆகியவை கிடைப்பதால் அனைவருடைய நாட்டமும் அதை சுற்றியே வருகின்றது.

     ஒரு காலத்தில் அரசு அதிகாரிகள், அரசு பணிகளுக்கு ஆட்கள் பிடிப்பதற்கென்றே வாகனத்தை வைத்துக் கொண்டு ஊர் ஊராக சுற்றித் திரிவார்களாம். அந்த நிலை இன்று மாறி, ஒரு காலி இடத்திற்கு ஆயிரக்கணக்கான பேர் போராடக்கூடிய நிலை இன்று வந்துள்ளது. இலட்சியமும், போராடும் குணமும் கொண்ட ஒரு சிலரே, அரசு பணியில் சேரும் கனவில் வெற்றி பெறுகிறார்கள்.

கீழ்காணும் சில அறிவுரைகளை உள்வாங்கிக் கொண்டு, கடினமாக உழைத்தால் நீங்களும் அரசு தேர்வில் வெற்றி பெறலாம்.

1) பொன்னான வாய்ப்பு
நம்மில் பலர் தனியார் பள்ளிகளில் குறைந்த ஊதியத்தில் அதிக பணிச்சுமையை கொண்டு பணிபுரிந்து வருகிறோம். சில நேரங்களில் நமது உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லையே என்று நினைத்து வருந்துவது உண்டு. நம் வாழ்வு இப்படியே தொடர்ந்து விடுமோ என்று நம்மில் பலர் அச்சம் கொண்டுள்ளோம். நம்முடைய இந்த நிலையை மாற்றுவதற்கு, நமக்கு கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பு PGTRB. ஆதலால் நாம் இந்த பொன்னான வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2) முதல் படி
முதலில் தேர்விற்கான பகுதிகளை (Syllabus) முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதுவே நாம் செய்யவேண்டிய முதல் செயல் . எனக்கு தெரிந்த ஒரு அகாடமியில்,  ஒரு நபர் சேர்ந்தவுடன் முதலாவதாக தேர்விற்கான பகுதியை(Syllabus) மனனம் செய்து எழுதச் சொல்வார்கள். இதுவே வெற்றிக்கான முதல் வழி. ஆகையால் உங்களுக்கான தேர்விற்கான பகுதியை முதலில் மனனம் செய்து எழுதிப்பாருங்கள்.

3) வளங்களை உருவாக்குதல்:
தேர்வுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்களையும் முதலில் தயார் செய்து கொள்ள வேண்டும். இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களில் தேர்வுகளுக்கென்று  பிரத்யேகமான பல வெப்சைட்டுகள், செயலிகள் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இது போன்ற தேர்வுகளுக்கு உதவும் பல்வேறு வளங்களை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) திட்டம் வரைதல்
       தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவர், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்வு எழுதும் நாள் வரை உள்ள காலத்தை கணக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை குறித்துக்கொள்ள வேண்டும். நேரத்தையும் படிக்க வேண்டியவற்றையும் ஒப்பிட்டு, ஒரு நாளைக்கு எவ்வளவு பாடங்கள் படித்தாக வேண்டும் என்பதை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.

      எப்பொழுதும் ஒரு தேர்விற்கு, என்னைப்பொறுத்தவரை மூன்று முறை படிப்பது சாலச் சிறந்தது. முதல் முறை படிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அடுத்த முறை எடுத்துக் கொள்ள அதிலிருந்து பாதி நேரம் எடுத்துக் கொள்ளும். கடைசி முறை திருப்பிப் பார்க்க தேர்வுக்கு முன்னாடி மூன்று நாள்கள் போதுமானது. ஆகவே இதை கருத்தில் கொண்டு கால திட்டத்தை வரையறுத்து கொள்ள வேண்டும்.

5) தடைகளை அகற்றுதல்
      இலக்கை நிர்ணயித்துக் கொண்டவன், முதலில் தன் இலக்கை அடைய விடாமல் தடுப்பது எது..? என்று கண்டறிந்து, அதனை முதலில் அகற்ற வேண்டும். இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் முதல் எதிரியாக அமைவது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்கள் ஆகும் . இத்தகைய வலைதளங்கள் நமது இலக்கை அடைய விடாமல் தடுக்கும் என்றால், முதலில் உங்கள் ஸ்மார்ட்போனை தூக்கி எறிந்துவிட்டு, சாதாரண கைபேசிக்கு மாறிவிடுங்கள். தேர்வில் வெற்றி பெற்ற பின்னரே ஸ்மார்ட் போனை கையில் எடுப்பேன் என்று உறுதி எடுத்து கொள்ளுங்கள். இப்படி உங்கள் இலக்கு எதனால் தடம் மாறுகிறதோ, அவற்றை முதலில் நீக்கிவிடவேண்டும்.

6) ஊக்கத்தோடு செயல்படுதல்
        எப்பொழுதும் நேர்மறையான எண்ணங்களுடன் செயல்பட வேண்டும். நாம் கட்டாயமாக தேர்வில் வெற்றி பெறுவோம். நம்மைவிட இந்த தேர்வுக்கு கடினமாக உழைப்பவர் யார்..? நான் தோற்றால் வேறு யார் வெற்றி பெறுவார்..? என்பது போன்ற நேர்மறையான வார்த்தைகளை அடிக்கடி பிரயோகித்து மனதினை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது.

7) குடும்பச்சுமை
நம்மில் பலர் பள்ளி முடித்து வீடு வந்ததும் குடும்ப சுமையை தாங்கும் நிலையில் இருக்கிறோம்.பெண்கள் குழந்தை பராமரிப்பு மற்றும் சமையல் என்று பிஸியாக இருப்பார்கள்.இந்நிலையில் நம்மால் எப்படி தேர்வில் கவனம் செலுத்தி வெற்றி பெற முடியும்? என்று நீங்கள் நினைக்கலாம். நீங்கள் உங்கள் குடும்ப சுமையை சுமந்து கொண்டும் கூட இந்த தேர்வில் வெற்றி பெறலாம். ஏனெனில் இதுவரை வெற்றி பெற்றவர்களும் கூட இந்த சுமையை சுமந்தவர்களே. நீங்கள் அதிகாலைப் பொழுதிலோ  அல்லது இரவு நேரங்களிலோ  ஒரு நாளைக்கு 2-3 மணி நேரம் எடுத்துக்கொண்டால் கூட போதுமானது. வார இறுதி நாட்களில் 8-10 மணி நேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இன்னும் தேர்விற்கு கிட்டத்தட்ட 60நாட்கள் இருப்பதால் நேர்த்தியாக இந்த நேரத்தை பயன்படுத்தினால் கட்டாயமாக வெற்றி பெறலாம்.

8) மனதினை தயார் செய்தல்
 ஒரு தேர்வில் வெற்றி பெற அதிகமான ஞாபகசக்தியும் படிப்பதற்கு தேவையான வசதியோ முக்கியமில்லை தெளிவான மனநிலையே அவசியமானது. தெளிவான மனநிலை கொண்ட ஒருவர் தேர்வில் எளிதில் வெற்றி பெறலாம். அதனால் உங்கள் மன நிலையை எப்பொழுதும் தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள்.

        எப்பொழுதும் படிப்பு.. படிப்பு.. என்று இராமல் தேவையான நேரங்களில் ஓய்வு எடுத்தல் அவசியமானதாகும். ஆகவே இடையிடையே பாடல் கேட்டல், நடைபயிற்சி, உறக்கம், குடும்பத்தினருடன் உரையாடுதல் உள்ளிட்டவை நன்மை பயக்கும். உடற்பயிற்சி, யோகா ஆகியவை மனதினை ஒழுங்குபடுத்தி கவனத்தை ஒழுங்குபடுத்தி, நாம் படித்தவற்றை மனதில் தங்க வைக்கும்.

9) இறுதி கட்ட போராட்டம் :

        தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வரை, கட்டாயமாக இரண்டு முறை பாடத்திட்டங்களை படித்திருக்க வேண்டும். கடைசி ஒரு வாரம் படித்தவற்றை திருப்பி பார்க்க எடுத்துக் கொள்ள வேண்டும். இறுதி நேரங்களில் திருமண விழாக்கள், கோயில் திருவிழா போன்ற எந்த ஒரு நிகழ்விலும் பங்கேற்காமல் இருப்பது நலம் பயக்கும். போதுமான நேரங்களில் நன்கு தூங்கி உற்சாகத்தோடு தேர்வு எழுத செல்ல வேண்டும்.

      மேற்கூறிய அனைத்தையும் பின்பற்றி கடினமாக உழைத்தால் கட்டாயமாக அரசுப்பணியில் வெற்றி பெறுவீர்கள்….

                      வாழ்த்துக்கள்….. இறைவனின் ஆசி என்றும் உண்டு..

வாழ்த்துக்களுடன்….

PGTRB தேர்விற்கான அனைத்து தகவல்கள், அறிவிப்புகள், PDF, syllabus, மாதிரி வினாத்தாள் போன்றவற்றை பெற்றுக்கொள்ள நமது தமிழ் மடல் வெப்சைட் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

www.tamilmadal.com

இந்த கட்டுரையை pdf-ல் பதிவிறக்கம் செய்ய கீழே சொடுக்கவும்.